ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு – வானிலை மையம்

வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இலங்கையின் திரிகோணமலைக்கு தென்கிழக்கே 700 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து தென்கிழக்கே 960 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்துக்குத் தென்கிழக்கே ஆயிரத்து 130 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருந்ததாகக் கூறியுள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாகவும், 36 மணி நேரத்தில் தீவிர புயலாகவும் மாறும் என அந்த மையம் கணித்துள்ளது.

தீவிர புயலாக மாறிய பிறகு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து ஆந்திராவின் ஓங்கோல் மற்றும் காக்கிநாடா இடையே டிசம்பர் 17-ம் தேதி பிற்பகலில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாளை மாலை முதல் ஆந்திராவை ஒட்டிய வட தமிழக கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழையும், பல இடங்களில் மழையும் பெய்யக் கூடும் என அந்த மையம் கணித்துள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றவர்கள் உடனடியாகக் கரை திரும்பவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *