தமிழகத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அணைகள் நிரம்பி, ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டதால் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நிவாரண நடவடிக்கைகளை பட்டியலிட்டார். வெள்ளத்தால் 43 வட்டங்களில் 186 கிராமங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 954 குடிசைகள் முழுமையாக சேதமடைந்திருப்பதாகவும், 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
7 ஆயிரத்து 167 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஈரோடு, திருச்சி, தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களில், 20 நிவாரண முகாம்களில் 5 ஆயிரத்து 595 பேர் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கேரளத்திற்கு இதுவரை 22 கோடியே 56 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.