சார்ஜாவிலிருந்து 25 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த சூடான் தம்பதியர், கோவை விமான நிலையத்தில் பிடிபட்டனர். சார்ஜாவிலிருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில், தங்கம் கடத்தப்படுவதாக, கோவை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகள் மிக கவனமாக பரிசோதிக்கப்பட்டன. அப்போது, சூடான் நாட்டைச் சேர்ந்த ஹபீஸ் அகமது ஈசாக் மூசா, அவரது மனைவி சஃபியா ஆகியோர் வைத்திருந்த சூட்கேஸ்களும் சோதனையிடப்பட்டன. அவற்றில் இருந்த செல்போன்களை பிரித்துப் பார்த்தபோது, பேட்டரிகள் இருக்க வேண்டிய இடத்தில் 5 தங்கக்கட்டிகள் இருந்தன. மேலும், ஹபீஸ் அகமது ஈசாக் மூசா அணிந்திருந்த பெல்ட்டின் பட்டை தங்கத்தால் செய்யப் பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த தம்பதியை கைது செய்த அதிகாரிகள், மொத்தம் 761 கிராம் எடை கொண்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் 25 லட்சம் ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.