ஆந்திர மாநிலம் கடப்பாவில் செம்மரம் வெட்டிக் கொண்டு வந்த சேலத்தை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூர் வனச்சரகத்தில் செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படையினர் மற்றும் வனத்துறையினர் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது செம்மரங்களை வெட்டி தோளில் சுமந்தபடி 70-க்கும் மேற்பட்டோர் வந்தனர்.
அவர்களை போலீசார் மற்றும் வனத்துறையினர் பிடிக்க முயன்றபோது கடத்தல்காரர்கள் அவர்கள் கொண்டு வந்த செம்மரங்களை ஆங்காங்கே வீசி விட்டு தப்பி ஓடினர்.
இதில் சேலம் மாவட்டம் வாழப்பாடி சேர்ந்த பழனி மற்றும் சின்னதுரை ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடியவர்களை கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து ஒரு கோடி மதிப்புள்ள 62 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.