கஜா புயல் பாதிப்பால் வெறிச்சோடிய கொடைக்கானல்

கஜா புயல் பாதிப்பால், சுற்றுலாப் பயணிகள் இன்றி கொடைக்கானல் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் மலைப் பகுதி முழுவதும் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது.

வனப்பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களான மோயர் பாயிண்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, பில்லர் ராக் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் கடந்து சென்று 4 நாட்கள் கடந்துள்ள நிலையில், தற்போது வரை வனத்துறையினர் சாலையில் விழுந்துள்ள மரங்களை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

போதிய ஆட்கள் இல்லாததால் சுற்றுலா தலங்களில் விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணி தாமதமாக நடைபெற்று வருவதால், அப்பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து மரங்களை அகற்றி வருகின்றனர். அவர்களுக்கு போதுமான கருவிகள் இல்லாத நிலையில், ரம்பத்தை கொண்டே மரங்களை அறுத்து வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, நூறு பேர் மட்டுமே தங்களிடம் உள்ளதால் பணிகள் தாமதமாவதாகவும், விரைவில் சுற்றுலா தலங்களில் உள்ள மரங்களை அகற்றி சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்றும் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *