பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக பிரான்ஸ் நாட்டில் மீண்டும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தொடரும் போராட்டங்களால் பாரிஸ் நகரம் முடங்கி உள்ளது.
பிரான்சில் எரிபொருள் மீதான வரிவிதிப்பைக் கண்டித்து கடந்த மூன்று வாரங்களாக வார இறுதி நாளில் தலைநகர் பாரிசில் போராட்டம் நடைபெற்றது. கடந்த வாரம் நடந்த போராட்டம் வன்முறையாக மாறி, கடைகள் மற்றும் வாகனங்கள் சூறையாடப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இன்றும் பாரிசில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். வாகன ஓட்டிகள் அந்நாட்டில் கட்டாயம் அணிய வேண்டிய அடர் மஞ்சள் வண்ண ஆடைகளை அவர்கள் அணிந்திருந்தனர். சாம்ப்ஸ் எலைசீஸ் வீதியில் திரண்ட அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ஏற்கெனவே குவிக்கப்பட்டு இருந்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைக்க முற்பட்டனர். ஆனால் வீசப்பட்ட குண்டுகளை பிடித்த போராட்டக்காரர்கள் அவற்றை போலீசாரை நோக்கி திருப்பி எறிந்தனர். நாய்களை வைத்தும் போராட்டக்காரர்களை போலீசார் கலைக்க முயற்சித்தனர்.
கண்ணீர் புகைக் குண்டுகள் வீச்சால் பாரிஸ் நகரே புகை மண்டலமாக காணப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பலரை போலீசார் தடியடி நடத்தி தரதரவென இழுத்துச் சென்றனர்.
ஒருபுறம் கூட்டம் கலைக்கப்பட்டாலும், மீண்டும் மீண்டும் வெவ்வேறு இடங்களில் சேருவதால் போலீசார் திணறி வருகின்றனர். மீண்டும் வன்முறை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது. முன்னெச்சரிக்கையாக ஈபிள் கோபுரம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.