பனாமா, ஹோண்டுராஸ், நிகரகுவா, குவாதமாலா உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து, மெக்சிக்கோ வழியாக அமெரிக்காவிற்குள் நுழைய முயல்பவர்கள் கற்களை வீசித் தாக்கினால் சுடப்படுவார்கள் என்ற பொருளில் அதிபர் டிரம்ப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அமெரிக்க பகுதியில் இருந்து நுழைய முயற்சிப்பவர்கள், மெக்சிக்கோ போலீசாரை நோக்கி, வன்மையான முறையில் கற்களை வீசி எறிந்ததாகக் குறிப்பிட்டார்.
அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயற்சி செய்யும் அவர்கள், எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க படையினரை நோக்கி கற்களை வீசிஎறிந்தால் பதிலடி கொடுக்கப்படும் என்றும் டிரம்ப் கூறினார். அப்படி கற்களை எறிந்தால் அவற்றை துப்பாக்கி குண்டுகளாக கருதி, பதிலடி கொடுக்குமாறு கூறியிருப்பதாகவும் அமெரிக்க அதிபர் தெரிவித்தார்.