மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக இருப்பதாகவும், அணையால் தமிழகத்திற்கே அதிக பயன் கிடைக்கும் என்றும் கர்நாடக அமைச்சர் சிவக்குமார் கூறியுள்ளார்.
கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். கர்நாடகாவும், தமிழகமும் பயன்படுத்த முடியாமல், கடலில் சென்று வீணாக கலக்கும் நீரை சேமிக்கவே மேகதாதுவில் அணைக் கட்ட முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேகதாது அணை மூலம் 67 டி.எம்.சி. நீரை சேமித்து வைக்க முடியும் என்றும், இதனால், தமிழக விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் அவர் கூறினார்.
மேகதாது அணை கட்ட உள்ள இடத்தை தமிழக முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு, கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த கர்நாடக அமைச்சர் சிவக்குமார், மேகதாது அணைத் திட்டத்தை தமிழக அரசு புரிந்து கொள்ளும் என நம்புவதாகவும் கூறினார். அணைத் திட்டம் குறித்து தமிழக முதலமைச்சரிடம் விளக்க நேரம் கேட்டிருப்பதாகவும், ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை என்ற அவர், தமிழக – கர்நாடக மக்கள் சகோதரர்களாக பழகுவதால், சண்டையிட விரும்பவில்லை என்றும் கூறினார்.
தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களை சமாளிக்க அணை கட்டுவதாகவும், இதனால், தமிழகத்திற்கே அதிக பயன் என்றும் சிவக்குமார் தெரிவித்தார். மேகதாது அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ளவே மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதாக கூறிய அவர், தமிழகத்தில் உள்ள எந்த கட்சியாக இருந்தாலும், அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இருப்பதாகவும் சிவக்குமார் விமர்சித்தார்.