ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு பொருட்களை 18 சதவீத வரி வரம்புக்குள் கொண்டுவருவது பற்றி முடிவெடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
31ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று முற்பகலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையிலான இந்த கூட்டத்தில் மாநிலங்களின் சார்பில் நிதியமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றுள்ளார்.
99 சதவீத பொருட்கள் 18 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டுவரப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில், இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. எனவே, 28 சதவீத ஜிஎஸ்டி வரம்புக்குள் உள்ள 34 பொருட்களை 18 சதவீத வரி வரம்புக்குள் கொண்டுவருவது பற்றி ஆலோசிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள், டயர்கள், ஏசி, மானிட்டர்கள், புரஜக்டர்கள் போன்றவற்றை 18 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.