ஜப்பான் பிரதமரை இன்று சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி….இரு நாடுகளிடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனத் தகவல்

ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவுடன் இருதரப்பு உறவுகள் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்தியா- ஜப்பான் இடையேயான உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று டோக்கியோ சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இந்த சந்திப்பின் போது,  ஜப்பான் பிரதமரும் பிரதமர் மோடியும் இரு நாட்டு உறவு, ஆசிய பிராந்திய விவகாரம், சர்வதேச பிரச்சனைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது. இது தவிர முதலீடு, சுகாதாரம், டிஜிட்டல் தொழில் நுட்பம், விவசாயம், உணவு பதப்படுத்துதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், புல்லட் ரயில் திட்டம் ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் தொழிலதிபர்கள் கூட்டத்திலும் பிரதமர் மோடி பேச உள்ளார்.

இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அவர் தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளார். மேலும் டோக்கியோவுக்கு அருகில் உள்ள ரோபட் தொழிற்சாலையை பிரதமர் மோடி பார்வையிட உள்ளார்.

ஜப்பானில் உள்ள இந்தியர்கள் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் மோடி பங்கேற்று பேச உள்ளார். இதன் பின்னர் 28-ஆம் தேதி அன்று பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேவும் டோக்கியோவில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் பியூஜி மலைச்சாரலில் உள்ள பண்ணை வீட்டுக்கு செல்கிறார்கள் . அங்கு மோடிக்கு, ஷின்ஷோ அபேவும், அவரது குடும்பத்தினரும் தனி விருந்து அளித்து கவுரவிக்கிறார்கள். ஷின்ஷோ அபே இதுபோல வேறு எந்த நாட்டு தலைவருக்கும் தமது வீட்டில் தனி விருந்து அளித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *