சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் படைவீரர் ஒருவர் உயிரிழப்பு

சத்தீஸ்கரில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் இன்று குண்டுவெடிப்பில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். சத்தீஸ்கரின் காங்கர் மாவட்டத்தில் கோயாலி பேடா என்னுமிடத்தில் மாவோயிஸ்ட்கள் அடுத்தடுத்து 6குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினர்.

இதில் பலத்த காயமடைந்த நக்சல் எதிர்ப்புப் படையின் உதவி ஆய்வாளர் மகேந்தர் சிங்கை ஹெலிகாப்டர் மூலம் ராய்ப்பூருக்குக் கொண்டுசென்று அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்தார். குண்டு வெடிப்பை அடுத்துக் காங்கர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்களின் மறைவிடங்களில் நக்சல் எதிர்ப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பீஜப்பூர் மாவட்டத்தில் நடத்திய சோதனையில் துப்பாக்கிகள், வெடிபொருட்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அங்குக் காவல்துறையினருடன் நிகழ்ந்த மோதலில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். சத்தீஸ்கரில் நாளை சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *