அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து பேருந்தில் பயணம் செய்வோர் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் பேருந்து பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க போக்குவரத்துக் கழகங்களில் சில அதிரடி மாற்றங்களை செய்ய போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதிலுமுள்ள பல்வேறு போக்குவரத்துக் கழகங்களுக்கு 4 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக 2 ஆயிரம் பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. புதிய பேருந்துகளில் நவீன வசதிகளுடன் கூடிய 40 ஸ்லீப்பர் பேருந்துகள், கழிப்பறை வசதிகளுடன் கூடிய 20 பேருந்துகள் மற்றும் 40 சொகுசு பேருந்துகளை வாங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இந்த பேருந்துகள் மே மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என கூறப்படுகிறது.