நாட்டில் உள்ள 20 பல்கலைக்கழகங்களை, உலக தரம் வாய்ந்தவைகளாக மாற்றுவதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில், அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருடன், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். விழா மேடையில் பேசிய பிரதமர் மோடி கற்றல் திறனில் புதுமையைப் புகுத்துவதற்காக கடுமையாக உழைத்து வருவதாகவும், இதன் மூலம் நாட்டின் கல்வித் திறன் உலக அளவில் வலிமையாகும் என்றும் தெரிவித்தார். கற்றல் திறனில் புதுமையை நோக்கி பல்கலைக்கழகங்கள் பயணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி, பிரச்சனைகளை தீர்க்கும் விதத்திலும் இளைஞர்கள் புதுமையாக சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், உலக அளவிலான போட்டிகளை சமாளிக்கும் வகையில், இந்திய பல்கலைக் கழகங்களை உலகத் தரம் வாய்ந்தவைகளாக மாற்றுவதற்காக அடுத்த 5 ஆண்டுகளில், 10 தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் 10 அரசு பல்கலைக் கழகங்களுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என்று மோடி உறுதி அளித்தார்.