18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு எதிரான வழக்கில் 3-வது நீதிபதியின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பை அடுத்து 3-வது நீதிபதி சத்திய நாராயணன் முன் முதலமைச்சர், சபாநாயகர் சட்டப்பேரவைச் செயலாளர், கொறடா மற்றும் 18 பேர் தரப்பு வாதங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இன்று 18 பேர் தரப்பு இறுதி பதில் வாதத்தில் கொறடாவின் புகாரிலும், சபநாயகரின் உத்தரவிலும் அரசியலமைப்பு சட்டத்தின் 10-வது அட்டவணையில் உள்ள தகுதி நீக்கத்துக்கான காரணங்கள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
சபாநாயகர் தரப்பு இறுதி பதில் வாதத்தில் அரசைக் கவிழ்க்கும் நோக்கத்துடனேயே 18 பேரும் ஆளுநரைச் சந்தித்ததாகவும், ஆதாரங்கள் ஆவணங்கள் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்தது தவறு இல்லை என்றும் கூறப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து எழுத்துபூர்வ வாதங்கள் தேவையில்லை என்று தெரிவித்த நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.