கத்தாரில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப இனி அனுமதி பெறத் தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கட்டாரில் பணியாற்றி வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல் நடத்தப்படுவதாக மனித உரிமை அமைப்புகளும், சர்வதேச தொழிலாளர் அமைப்பும் குற்றம்சாட்டி வந்தன. அங்கிருந்து சொந்த நாட்டிற்கு திரும்ப விசா அனுமதி பெற வேண்டும் என்பதால், வேலை பார்க்கும் நிறுவனம் அல்லது உரிமையாளரிடம் அனுமதி பெறாமல் வெளியேற முடியாத சூழலும் இருந்தது.
இந்நிலையில், 2022 கால்பந்து உலகக் கோப்பை போட்டி கத்தாரில் நடைபெற உள்ள நிலையில், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப இனி எந்த அனுமதியும் பெறத்தேவையில்லை என கத்தார் அரசு அறிவித்துள்ளது. விசா நடைமுறையில் அதற்கான திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.