ஆந்திராவில் அடுத்த மாதம் 11-ம் தேதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், மாநில சுயாட்சி மாநாடு நடத்தப்படும் என்று எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் அங்கனூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், டெங்கு காய்ச்சல் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் ரூபாய் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்தார்.
அகில இந்திய அளவில் மொழி வாரி மாநிலங்கள் பிரிந்த நாளான நவம்பர் ஒன்றாம் தேதி சென்னையில் தனது தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாகவும், நவம்பர் 11-ம் தேதி ஆந்திராவில் மாநில சுயாட்சி மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
கேரள அரசைப் போல் தமிழகத்தில் அனைத்து சாதியினரையும், அர்ச்சகர்களாக நியமிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார்.
தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும் வலியுறுத்திய எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன், அரியலூர் மருத்துவ இணை இயக்குநர் நியமிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.