ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களின் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கு ஜனவரி மாதம் 29ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வார் மற்றும் ஆஜ்மீர், மேற்கு வங்காளத்தின் உலுபெரியா மக்களவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் உயிரிழந்ததால் அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் உள்ள மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஜனவரி மாதம் 29ஆம் தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், காலியாக உள்ள உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கோரக்பூர் மற்றும் புல்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.