நவம்பர் 8 ஆம் தேதியை கறுப்புப்பண எதிர்ப்பு தினமாக அனுசரிக்க பாரதிய ஜனதா முடிவு செய்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜேட்லி, பாரதிய ஜனதா தலைவர்கள் நவம்பர் 8ஆம் தேதி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கறுப்புப் பணத்திற்கு எதிராக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்க இருப்பதாக தெரிவித்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகப்பெரிய பொருளாதார முடிவு என்றும், அதன் மூலம் ரொக்கப்பரிவர்த்தனை குறைக்கப்பட்டு, மின்னணுப் பரிமாற்றம் அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் ஜேட்லி கூறினார். பொருளாதாரச் சீரமைப்பு குறித்த அறிவிப்புகளைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு வெளியிடவில்லை என்று கூறிய அவர், நீண்ட காலப்பலன்களை நோக்கமாக கொண்டே அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் ஜேட்லி தெரிவித்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட நவம்பர் 8 ஆம் தேதியை கறுப்பு நாளாக அனுசரிக்கப்போவதாக, காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், அதற்கு பதிலடி தரும் வகையில் அதே நாளை கறுப்புப் பண எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப் போவதாக பாரதிய ஜனதா அறிவித்துள்ளது.