முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே தமிழகத்தின் தற்போதைய தேவை ; துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கோரிக்கை

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாக்குறுதியை நிறைவேற்றுவதே தமிழகத்தின் தற்போதைய தேவை என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் பொறுப்பு ஆளுநரும், தற்போது மாகாராஷ்ட்ராவின் ஆளுநராகவும் உள்ள வித்யாசாகர் ராவ், தமிழகத்தின் கடந்த 13 மாத அரசியல் நிகழ்வுகள் குறித்து எழுதிய “தோஸ் ஈவன்ட் ஃபுல் டேஸ்” என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. மேலும் ஆளுநர் மாளிகையின் மின் உற்பத்தித் தேவையை ஈடு செய்வதற்கான சூரிய மின் உற்பத்தித் திட்டத்தின் தொடக்க விழாவும் அங்கு நடைபெற்றது. இதில், தமிழகத்தின் தற்போதைய ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அரசு அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், வித்யாசாகர் ராவ் எழுதிய புத்தகத்தை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்.

பின்னர் பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாக்குறுதியை நிறைவேற்றுவதே தற்போதைய தேவை என்றும், ஆட்சி குறித்த தீர்ப்பை அளிக்க வேண்டியவர்கள் மக்களே தவிர ஆளுநரல்ல என்றும் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

இதனையடுத்து இவ்விழாவில் பேசிய தமிழகத்தின் முன்னாள் பொறுப்பு ஆளுநரும், தற்போதைய மகாராஷ்ட்ர ஆளுநருமான வித்யாசாகர் ராவ் , தாம் பதவியில் இருந்த 13 மாதங்களும் தமிழகம் கடுமையான அரசியல் சிக்கல்களை எதிர்கொண்ட காலக்கட்டமாகும் எனக் குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவர்கள் தம்முடைய கருத்துகளில் முரண்பட்ட போதும், மரியாதையுடன் நடந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *