மீனவர்களை தேடும் முயற்சி தொடர்ந்து நடைப்பெற்று வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு செய்தார்.
இதையடுத்து நாகர்கோயிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், போர்க்கப்பல்கள் மூலம் மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
இதேப்போல் புயல் பாதித்த இடங்களை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி உள்ளிடோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புயலால் கன்னியாகுமரி மாவட்டம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது நிலைமை சீரடைந்து வருவதாகவும் தெரிவித்தார். ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு, உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும், அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கடலுக்குள் சென்ற மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் இதுத்தொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், ஒகி புயல் தாக்கிய 3 மாவட்டங்களை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் என்று அறிவிக்க வேண்டும் என்றும், மத்திய அரசு தேவையான உதவிகளை நல்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.