மழை வெள்ள பாதிப்புகளை குறித்து ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று மத்தியக் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த அக்டோபர், நவம்பர் மாதத்தில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக, சென்னை புறநகர் பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனிடையே நவம்பர் 30ஆம் தேதி வங்க கடலில் உருவான ஓகி புயல் கன்னியாகுமரி கடல் பகுதியில் கோரத்தாண்டவம் ஆடியது. இதனால் அம்மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. மேலும், மீனவர்கள் பலர் மாயமாகினர், மேலும் பலர் உயிரிழந்தனர். ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, ஓகி புயல் மற்றும் மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மத்திய உள்துறை இணை செயலாளர் சஞ்சீவ் குமார் ஜிந்தால் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மத்திய அரசால் அமைக்கப்பட்ட அந்த குழுவினர் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அதில் ஒரு குழுவினர் நேற்று கன்னியாகுரி மாவட்டத்தில் தங்களுடைய ஆய்வை தொடங்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து இன்றும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிய வருகிறது. மற்றொரு குழுவினர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கின்றனர்.
திருவள்ளுர் மாவட்டம் வரதராஜபுரத்தில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்தியக்குழு அதிகாரி, மழை வெள்ள பாதிப்புகள் பற்றி அறிக்கை தயாரிக்கப்பட்டு, அந்த அறிக்கை 10 நாட்களில் மத்திய அரசிடம் சமர்பிக்கப்படும் என தெரிவித்தார்.