ஒரு மாத காலத்திற்கு பிறகு மத்திய பாதுகாப்பு குழு ஆய்வு நடத்துவது தமக்கு மிகவும் வேதனை அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே, தலைமைச் செயலக பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு தனி நல வாரியம் வேண்டும், பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.
அப்போது பேசிய எழுச்சித்தமிழர், பத்திரிக்கையாளர்களின் 5 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துவதாக தெரிவித்தார்.
மேலும் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் ஊடகவியலாளர்களின் பொறுப்பு சிறப்பானது என்று கூறிய அவர் ஜனநாயகத்தின் 4வது தூணாக பத்திரிக்கையாளர்கள் இருப்பினும் அவர்களுக்கான நலத்திட்டங்கள் எதுவும் செய்துதரப்படவில்லை என்றும், பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுவதாகவும் கூறினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு மாத காலம் கடந்த பின்னர் மத்திய பாதுகாப்பு குழு ஆய்வு நடத்துவதற்காக வந்திருப்பது, மிகவும் வேதனை அளிப்பதாக தெரிவித்தார். மேலும் விரைவில் கன்னியாகுமரி மாவட்டதை பேரிடர் பாதித்த மாவட்டமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார்.