மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கிழக்கு கோபுரம் அருகே, ஆயிரம்கால் மண்டபம் பகுதியில் இருந்த பிளாஸ்டிக் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் விற்பனைக் கடையில் நேற்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. பற்றிய தீ சற்று நேரத்தில் மற்ற கடைகளுக்கும் பரவியது. 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒன்றரை மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் தீவிபத்து நேர்ந்த பகுதிகளை அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கோயில் வளாகத்தில் கடைகள் இயங்கி வருவது குறித்து நிபுணர் குழு கொடுக்ககூடிய அறிக்கையை பொறுத்தே தீர்மானிக்கபடும் என்று தெரிவித்தார். மேலும் தீவிபத்து குறித்து விசாரிக்க ஆய்வுக்குழு அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
2018-02-04