மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 400க்கும் மேற்பட்ட காளைகளும், 479 மாடுபிடி வீரர்களும் கலந்துக்கொண்டனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி அவனியாபுரத்தில் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாவும் நடைபெற்றது. இதனை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர்தொடங்கி வைத்தனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்
முதலாவதாக ஊர் மரியாதையை ஏற்கக்கூடிய கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து ஓடிவரும் காளைகளை அடக்க வீரர்கள் தீவிரம் காட்டினர். காளையை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. யார் கையிலும் சிக்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
கடந்த வருடத்தை விட இவ்வருடம் போட்டியில் கலந்து கொள்ளும் மாடுகளுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் ஏராளமான கட்டுப்பாடுகள் போடப்பட்டது. சோதனைகளைக் கடந்து 954 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், போதிய வெளிச்சம் இல்லாத நிலையில், ஐந்து மணியளவில் போட்டிகளை முடித்துக்கொள்வதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
இதனால், 400க்கும் மேற்பட்ட காளைகளே களமிறங்கின. 479 வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார்