நடிகர் ரஜினிகாந்த் மதவாதத்தின் மற்றொரு முகமாக அரசியலில் களமிறங்குவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சியில் திராவிடர் கழகம் சார்பில் உலக நாத்திகர் மாநாடு நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் இம்மாநாட்டில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், நாடு முழுவதும் கடவுள் மறுப்பு கொள்கையை இறுதிமூச்சு உள்ளவரை பரப்பியவர் தந்தை பெரியார் என்று புகழாரம் சூட்டினார். மேலும் உலகின் தலைசிறந்த கொள்கை மனிதநேயம் என்று கூறிய அவர், பெரியாரியம், அம்பேத்கரியம் என்பது அடிப்படையில் மனிதநேயம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் பல இயக்கங்களை இயக்குவது ஆர்.எஸ்.எஸ் தான் என்று குற்றம் சாட்டினார். நடிகர் ரஜினிகாந்த் மதவாதத்தின் மற்றொரு முகமாக அரசியலில் களமிறங்குவதாகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உறுதிபட தெரிவித்தார்.