கோரிக்கைகள் நிறைவேறும் வரை போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஊதிய உயர்வு, நிலுவை தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 3 நாட்களாக தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து சென்னை தி.நகரில் அமைந்துள்ள தொமுச சங்க கட்டிட அலுவலகத்தில் பல்வேறு தொழிற்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிஐடியு, தொமுச, எஐடியுசி உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் கலந்துக்கொண்டன. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொமுச சங்கத்தின் தலைவர் சண்முகம், கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார். மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி நாளை மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே கரூரில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து கழக தொழிலாளர்கள் இன்றைய தினத்திற்குள் பணிக்கு திரும்பாவிட்டால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்கள் பாதிக்கப்படையாத வகையில் தற்காலிக ஓட்டுநர்களால் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
போக்குவரத்து ஊழியர்கள் இன்றைய தினத்திற்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பேருந்துகளை சேதப்படுத்தும் ஊழியர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.