அரசு பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளியூர்களுக்குச் செல்லும் சாதாரண பேருந்துகளில் 10 கிலோ மீட்டர் வரையில் இதுவரையில் 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் விரைவுப் பேருந்துகளில் 30 கிலோ மீட்டர் வரையில் தற்போது 17 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், அது 24 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பாயின்ட் டூ பாயின்ட் அதி சொகுசுப் பேருந்துகளில் இதுவரை 18 ரூபாயாக உள்ள கட்டணம் 27 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதி நவீன சொகுசுப் பேருந்துகளில் 21 ரூபாயாக இருந்த கட்டணம் 33 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குளிர்சாதனப் பேருந்துகளில் 27 ஆக இருந்த கட்டணம் 42 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வோல்வோ பேருந்துகளில் 33 ஆக இருந்த கட்டணம் 51 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நகரப் பேருந்துகளைப் பொருத்தவரையில் சென்னை மற்றும் பிறநகரங்களில் குறைந்த பட்சக் கட்டணம் 3 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சக் கட்டணம் சென்னை தவிர பிற நகரங்களில் 12ல் இருந்து 19 ஆகவும் சென்னையில் 14ல் இருந்து 23 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இயக்கப்படும் வோல்வோ பேருந்துகளின் குறைந்த பட்சக் கட்டணம் 15 ரூபாயில் இருந்து 25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சக் கட்டணம் 100 ரூபாயில் இருந்து 150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் அடிப்படை பேருந்து கட்டணத்துடன் 20 சதவிகிதம் அதிகமாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கட்டண உயர்வு தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் என்றும், இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்துக் கழகங்களில் செலவு அதிகரித்துள்ளதால் பேருந்துக் கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே பேருந்து கட்டணம் உயர்வு குறித்து பொதுமக்களின் கருத்தை தற்போது காணலாம்…
பேருந்து பழைய கட்டணம் புதிய கட்டணம்
சாதரண 10.கி.மீ ரூ.5 ரூ.6
விரைவு 30.கி.மீ ரூ.17 ரூ.24
அதிசொகுசு 30.கி.மீ ரூ.18 ரூ.27
அதிநவீன சொகுசு ரூ.21 ரூ.33
குளிர்சாதனம் ரூ.27 ரூ.42
வோல்வோ ரூ.33 ரூ.51