கோவையில் விடுதியில் தங்கியிருந்த பெண்களை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட அதன் உரிமையாளர், நெல்லை அருகே கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கோவை பீளமேட்டை சேர்ந்த ஜகநாதன் என்பவரின் தர்சனா மகளிர் விடுதியில் 200க்கும் மேற்பட்ட வேலைக்குச் செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் தங்கியிருந்தனர். அவர்களில் சிலரை, விடுதிக் காப்பாளரான புனிதாவும், உரிமையாளர் ஜெகநாதனும் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, இருவரும் தலைமறைவாகினர். அவர்களை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், ஜெகன்நாதன் நெல்லை குற்றாலத்தில் தனது நண்பர்களுடன் தங்கியிருந்துள்ளார்.
ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஜெகநாதனுக்கு இன்று ஜாமீன் கிடைத்துவிடும் எனக் கூறி, வழக்கறிஞர் அவரை சிவலார்குளம் பகுதியில் தங்கவைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு ஜகன்நாதனின் உடல் அதே பகுதியிலுள்ள கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது. ஜெகன்நாதனின் உடலை மீட்ட போலீசார், நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். ஜெகன்நாதன் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என விசாரணை நடைபெற்று வருகின்றது.