பிரதமர் நரேந்திர மோடிக்கு சாம்பியன்ஸ் ஆஃப் த எர்த் எனும் உயரிய விருதை ஐநா பொதுச் செயலாளர் அன்டானியோ குட்டரஸ் வழங்கி கவுரவித்தார்.
பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் பாரீஸ் உடன்படிக்கையைச் செயல்படுத்த முனைந்ததற்காகவும், 2022ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க நடவடிக்கை எடுத்ததற்காகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் சாம்பியன்ஸ் ஆஃப் த எர்த் என்னும் விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐ.நா. பொதுச்செயலர் அன்டானியோ குட்டரஸ், பிரதமர் நரேந்திர மோடிக்கு விருதை வழங்கிச் சிறப்பித்தார்.
அப்போது பேசிய குட்டரஸ், பருவநிலை மாற்றம் புவிக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதை அங்கீகரித்ததுடன் அதைத் தடுக்கப் பாடுபட்டவர் நரேந்திர மோடி எனத் தெரிவித்தார். விருதைப் பெற்றபின் ஏற்புரையாற்றிய பிரதமர் மோடி, இந்த விருது இந்திய மக்களுக்கானது எனத் தெரிவித்தார். இந்தியர் அனைவரும் சுற்றுச்சூழலைக் காக்கக் கடமைப்பட்டுள்ளதாகவும் மோடி தெரிவித்தார். பருவநிலையும், இயற்கைப் பேரிடரும் பண்பாட்டுடன் நேரடித் தொடர்புள்ளவை என்றும் தெரிவித்தார். பருவநிலைக்கு முக்கியத்துவம் அளிக்காவிட்டால் இயற்கைப் பேரிடரைத் தவிர்க்க முடியாது என்றும் மோடி தெரிவித்தார்.