தேவாலயங்களில் பாவமன்னிப்பு கேட்கும் வழக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரைக்கு, கேரள கத்தோலிக்க பேராயர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது.
கேரளாவில், பாவமன்னிப்பு கேட்க வந்த பெண் ஒருவரிடம் சிரியன் ஆர்த்தடாக்ஸ் பிரிவைச் சேர்ந்த 4 பாதிரியார்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதேபோல, கோட்டயத்தில், ரோமன் கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை, பேராயர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக மத்திய உள்துறைக்கு அறிக்கை அளித்த மத்திய மகளிர் ஆணையம், இந்த குற்றச்சாட்டுகளை மத்திய புலனாய்வு முகமைகள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேவாலயங்களில் பாவமன்னிப்பு கேட்கும் முறையை ரத்து செய்ய வேண்டும். இதை பாதிரியார்கள் தவறாக பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், கேரளாவில் நடைபெற்ற கத்தோலிக்க பேராயர்கள் கூட்டத்தில், தேசிய மகளிர் ஆணையத்தின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பிரதமருக்கு பேராயர்கள் கூட்டமைப்பு அனுப்பியுள்ள கடிதத்தில், தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரையை திரும்ப பெற வேண்டும் எனவும் தேவாலயங்களில் பாவமன்னிப்பு கேட்கும் முறை பல ஆண்டுகளாக இருந்து வருவதால் அதை நீக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.