கோவா மாநில பாட நூல்களில் நேருவின் படம் நீக்கப்பட்டு சாவர்க்கரின் படம் சேர்க்கப்பட்டுள்ளதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் அரஸ் முல்லா குற்றம் சாட்டியுள்ளார்.
கோவாவில் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதையடுத்து 10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 68வது பக்கத்தில் ‘இந்தியா மற்றும் சமகால உலகம் 2 – ஜனநாயக அரசியல்’ என பெயரிடப்பட்ட பாடம் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் அந்த புத்தகத்தின் கடைசி பதிப்பில் நேரு, மகாத்மா காந்தி, மௌலானா ஆசாத் ஆகியவர்களின் படம் இடம் பெற்றிருந்தது. பள்ளிகள் திறக்கப்பட்டு புத்தகங்கள் புதிதாக அச்சடிக்கப்பட்ட நிலையில் புதிய புத்தகங்களில் ‘1904-ம் ஆண்டும் புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்ட முக்கிய புரட்சியாளரான வினாயக் தாமோதர் சாவர்கர், அபினவ் பாரத் எனும் இயக்கத்தை தொடங்கி புரட்சிகளை வழிநடத்தினார்’ என புதிதாக சேர்க்கப்பட்டு அவரது படமும் இடம் பெற்றுள்ளது. மேலும் நேருவின் படமும் நீக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் அரஸ் முல்லா கூறுகையில், “பள்ளி மாணவர்களின் புத்தகங்களில் நேருவின் படம் நீக்கப்பட்டு சவார்க்கரின் படம் சேர்க்கப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது” எனத் தெரிவித்தார். மேலும், “நாளை காந்தியின் படத்தையும் புத்தகத்திலிருந்து நீக்கிவிட்டு காங்கிரஸ் இந்த நாட்டிற்கு என்ன செய்தார்கள் என கேள்வி எழுப்புவார்கள்” என சாடினார்.