பாகிஸ்தானுக்குச் செல்வது தமிழ்நாட்டுக்குச் செல்வதைவிடச் சிறந்தது எனப் பஞ்சாப் மாநில அமைச்சர் நவஜோத்சிங் சித்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற விழாவுக்குச் சென்ற நவஜோத் சிங் சித்து, பாகிஸ்தான் இராணுவத் தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவைக் கட்டிப் பிடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தச் செயல் கடும் சர்ச்சைக்குள்ளானது. அந்தச் சர்ச்சை ஓய்வதற்குள் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் வகையில் சித்து பேசியுள்ளார். தமிழ்நாட்டுக்குச் செல்வதைவிடப் பாகிஸ்தானுக்குச் செல்வது சிறந்தது எனத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் மொழியும் தனக்குப் புரியாது; அங்குள்ள உணவுவகைகளும் தனக்குப் பிடிக்காது எனக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில் பாகிஸ்தானில் மொழிச்சிக்கலுமில்லை; அங்குள்ள உணவுவகைகளும் தனக்குப் பிடிக்கும் என்று சித்து தெரிவித்துள்ளார்.