பயங்கரவாதிகளைப் பத்திரமாக பாதுகாக்கும் மையமாக பாகிஸ்தான் செயல்பட்டு வருவதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சனை, சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசினார். பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்திற்கு பிறகு, இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உள்ளிட்ட உறவுகள் வலுவடைந்துள்ளதாக சுஷ்மா சுவராஜ் கூறினார். மேலும், பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதற்கும், பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கிறது என்பதற்கும் அண்மையில் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தாக்குதலே சான்று என்று அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய ரெக்ஸ் டில்லர்சன், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும், அமெரிக்காவும் தோளோடு தோள் நிற்பதாக கூறினார். பயங்கரவாதிகள் பாதுகாக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.