அரியலூர் மாணவி அனிதா மரணம் குறித்த புகாரை விசாரிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா நீட் தேர்வு பாதிப்பால் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரஞ்சன் என்பவர் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், நீட் தேர்வுக்கு எதிராக போராடிய அனிதாவின் மரணம் குறித்து புலன் விசாரணை நடத்தக் கோரி செந்துறை காவல்நிலைய ஆய்வாளரிடம் மனு அளித்ததாகவும், அதுகுறித்து காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என முறையிடப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அனிதா மரணம் குறித்து அளிக்கப்பட்ட புகாரை விசாரணை செய்ய வேண்டும் என்று செந்துறை காவல்துறைக்கு உத்தரவிட்டது. மேலும் விசாரணையில் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.