கரூர் அருகே பரமத்தியில் அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்த அருள்செல்வன், சக மாணவர்களுடன் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தலைமையாசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் அருள்செல்வனின் தந்தை சுரேஷுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இனி இதுபோல் நடக்காது என்று ஆசிரியர்களிடம் சுரேஷ் உறுதி அளித்த பின்னரும் தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் மாணவனை தொடர்ந்து திட்டியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனது இறப்புக்கு பள்ளியின் தலைமையாசிரியர், உடற்கல்வி மற்றும் கணித ஆசிரியரே காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு அருள்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த விசாரணைக்கு பிறகு உடற்கல்வி ஆசிரியர் ஜெயபால், கணித ஆசிரியர் செந்தில் ஆகியோரை வேறு பணிகளுக்கு இடம் மாற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும் பள்ளிக்கல்வி இயக்குநருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மாணவன் தற்கொலை தொடர்பாக விசாரணை, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.