தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. ஸ்டெர்லைட் ஆலையை நோக்கி பேரணியாக சென்ற 500க்கும் மேற்பட்டோர், ஆலையை மூட வலியுறுத்தி முழக்கமிட்டனர். அப்போது, போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி சென்று ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர், ஸ்டெர்லைட் ஆலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.