ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே செம்மரம் வெட்டிய தமிழர்களில் 4 பேரை துப்பாக்கி முனையில் ஆந்திர போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார், செம்மரங்களை வெட்டி எடுத்து வந்த ஒரு கும்பலை பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடவே அவர்கள் தப்பியோட முயன்றுள்ளனர்.
அவர்களில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஜவ்வாது மலையைச் சேர்ந்த சிவக்குமார், ஏழுமலை, மாணிக்கம் மற்றும் அவரது மகன் சேகர் ஆகியோரை போலீசார் மடக்கி கைது செய்தனர். அவர்களிடமிருந்து 13 லட்ச ரூபாய் மதிப்பிலான 21 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.