திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ஒட்டன்சத்திரத்தை அடுத்த பலக்கனூத்து அருகே வந்தபோது, அரசுப் பேருந்தின் பின்புறம் தனியார் பேருந்து, மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அரசுப் பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு, திண்டுக்கல் மற்றும் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைகளில் அனுமதித்தனர். அவர்களில் மேலும் 2 பேர் மருத்துவமனையில் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. காயமடைந்தவர்களில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவபவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.