தாய்லாந்து குகையில் சிக்கி இருந்த 13 பேரும் வெற்றிகரமாக மீட்பு

தாய்லாந்தில் குகையில் சிக்கிய இளம் கால்பந்து அணியினர் அனைவரும் 17 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தின் ச்சியாங் ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவான் நாங் நான் (Tham Luan Nang Non) குகைக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி பயிற்சியாளர் தலைமையில் 12 இளம் கால்பந்து வீரர்கள் சென்றனர். 10 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தக் குகையில் திடீர் மழை வெள்ளத்தில் சிக்கி அனைவரும் குகைக்குள் அடித்துச் செல்லப்பட்டனர். ஏற்றமும் இறக்கமுமாகவும், குறுகிய சிக்கலான பாதைகளைக் கொண்ட இந்த குகையின் வெகு உள்ளடங்கிய இருளான பகுதியில் சிக்கிய இவர்கள் அனைவரும் 9 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டனர்.

எனினும் குகையின் பல்வேறு பகுதிகளில் பல மீட்டர் உயரத்துக்கு வெள்ளம் சூழ்ந்திருந்ததால் அவர்களை மீட்டுக் கொண்டு வருவது சவால் நிறைந்த பணியாக இருந்தது. இதையடுத்து குகைக்குள் ஏராளமான ஆக்சிஜன் சிலிண்டர்களை கொண்டு சென்ற மீட்புக் குழுவினரும், நீச்சல் வீரர்களும் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தினர். நேற்று முன் தினம் 4 சிறுவர்களையும் நேற்று 4 சிறுவர்களையும் மீட்டனர். அவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், இருப்பினும் ஒரு வாரம் மருத்துவ சிகிச்சை பெறவேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் எஞ்சிய 4 சிறுவர்களையும் பயிற்சியாளரையும் மீட்கும் பணி  காலை முதல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது 4 சிறுவர்களும் பயிற்சியாளரும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *