மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்கள் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஆணையத்தால் எவ்வித பயனும் இருக்கப்போவதில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைபாடு காரணமாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 75 நாள் தொடர் சிகிச்சைகளுக்குப் பிறகு டிசம்பர் 5-ஆம் தேதியன்று மரணமடைந்தார். ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்கள் தொடர்பாக முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், அமைச்சர் திண்டுக்கல் சினிவாசன் மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, ஜெயலலிதாவை சிகிச்சையின் போது யாரும் சந்திக்கவே இல்லை என்றும், அவர் இட்லி சாப்பிட்டதாக தாங்கள் பொய் கூறியதாக அதிர்ச்சியான தகவல்களை கூறினார். இதனால், ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்கள் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படுவதாக தமிழக அரசு முறையான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு நியமித்துள்ள விசாரணை ஆணையத்தால், எவ்வித பயனும் இருக்கப்போவதில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதால் அவசரமாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் இனியும் காலம் தாழ்த்தாமல் மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.