கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே ஊரக்கோணம் பகுதியைச் சேர்ந்த தங்கம் என்பவர் ரப்பர் பால் வெட்டும் தொழில் செய்துவந்தார். தங்கத்துக்கு சொந்தமாக ரப்பர் தோட்டம் உள்பட பல சொத்துக்கள் இருப்பதாகவும், இவரது மகன் பாக்கியராஜ் வேலைக்கு ஏதும் செல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சுயத்தொழில் தொடங்க வசதியாக தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து தரும்படி தந்தையான தங்கத்திடம் பாக்கியராஜ் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
முதலில் ஒரு வேலையில் சேருமாறும், பின்பே சொத்தை எழுதி தருவேன் என்றும் தங்கம் கூறியதால் பாக்கியராஜ் ஆத்திரமடைந்துள்ளார். பின்னர் தனது தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் பாக்கியராஜை கைது செய்தனர்.