சென்னை கொளத்தூர் நகைக்கடையில் நாதுராம் கொள்ளையடித்த நகைகளில் ஒன்றரை கிலோ மீட்பு…பெங்களூருவில் விற்கப்பட்டுள்ள தங்க நகைகளை மீட்க காவல்துறை தீவிரம்;

சென்னை – கொளத்தூர் நகைக்கடையில் நாதுராம் கொள்ளையடித்த நகைகளில் ஒன்றரை கிலோ நகைகள் அடகுக்கடை உரிமையாளரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடையில் நாதுராம் உள்ளிட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த கும்பல், நகை, பணத்தைக் கொள்ளையடித்தது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, கடந்த வாரம் நாதுராமையும், அவனது கூட்டாளிகள் 2 பேரையும் தமிழக போலீசார் சென்னை அழைத்து வந்தனர். இவர்கள் மூவரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து ராஜமங்கலம் போலீசார் விசாரணை நடத்தியதில், கொள்ளையடித்த நகைகளை அவர்கள், சென்னையிலும், பெங்களூரிலும் உள்ள அடகுக்கடைகளில் விற்றது தெரியவந்தது. இதன்பேரில், சென்னையில் திருட்டு நகைகளை வாங்கிய பிராட்வே, என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள அடகுக்கடைக்காரர் ஒருவரிடம் விசாரணை நடைபெற்றது. இதனை தொடர்ந்து நாதுராமிடம் இருந்து அவர் வாங்கிய ஒன்றரை கிலோ தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதனிடையே, பெங்களூரில் நாதுராம் கும்பல், ஒரு கிலோ தங்க நகைகளை விற்றுள்ளது. அந்த நகைகளை மீட்கவும், விசாரணை நடத்தவும் நாதுராமை அழைத்துக் கொண்டு போலீசார் பெங்களூர் சென்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *