சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதனால் அங்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திமுக வேட்பாளர் மருதுகணேசை ஆதரித்து அக்கட்சியின் செயல்தலைவர் மு.க,ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். அவருடன் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் ,கம்யூனிஸ்ட் முஸ்லிம் லீக் கட்சி தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அதிமுக வேட்பளாரான மதுசூதனனை ஆதரித்து அமைச்சர்கள் அனைவரும் ஆர்.கே நகரில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்., அவர்கள் தாரை தப்பட்டை முழங்க தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதே போன்று நாம்தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயத்தை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் கரு நாகராஜனும், பகுஜன் சமாஜ் கடசி வேட்பாளர் சத்தியமூரத்தி, ஆகியோர் அவர்களது ஆதரவாளர்களுடன் சென்று ஓட்டு சேகரித்தனர்.
டிடிவி தினகரன் உள்ளிட்ட சுயேச்சை வேட்பாளர்களும் ஆர்கே நகரை முற்றுகையிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருப்பதால் தொகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இதனிடையே ஆர்.கே.நகர் தொகுதியிலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும் வாக்குப்பதிவு இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், வடசென்னை காவல் இணை ஆணையர் சுதாகர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதில், போக்குவரத்து காவல் இணை ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்கா வடசென்னை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.