சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை நிர்வாகிகள் கூட்டம்; ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு குறித்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், இரட்டை இலை சின்னத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவும், அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பறித்து விட வேண்டும் என்பதற்காகவும் டிடிவி தினகரனும் திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் இணைந்து செய்து கொண்ட ரகசிய உடன்பாட்டின் விளைவுதான் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு என்று தெரிவித்துள்ளனர். இந்த வெற்றியை தமிழக மக்களின் ஒட்டுமொத்த எண்ண ஓட்டம் என ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், இந்தத் தேர்தல் முடிவு தமிழகத்தின் வேறு எந்த சட்டமன்றத் தொகுதிக்கும் பொருந்தாது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களை ஏமாற்றி பெற்றுள்ள இந்த வெற்றி அதிமுகவுக்கு எந்த ஒரு சரிவையோ பின்னடைவையோ ஏற்படுத்தாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *