சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டுநர்கள் 61ஆயிரம் பேரின் உரிமத்தைப் பறிக்க வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களை மாநகரப் போக்குவரத்துக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
சிக்னல்களை மதிக்காமல் வாகனத்தில் செல்லுதல், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், அதிவிரைவாகச் செல்லுதல், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் செல்லுதல், செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல்,தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுதல், சீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டுதல் ஆகியவை போக்குவரத்து விதிமீறல்களாகும். இத்தகைய விதிமீறல்களைச் செய்த 61ஆயிரத்து 504 பேரின் ஓட்டுநர் உரிமங்களை நீக்க வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்குச் சென்னைப் போக்குவரத்துக் காவல்துறை பரிந்துரைத்துள்ளது.
இவர்களில் அதிவிரைவாக வாகனம் ஓட்டியவர்கள் இரண்டாயிரத்து 917பேர். சிக்னல்களை மதிக்காமல் சென்றவர்கள் 29ஆயிரத்து 32பேர். குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்கள் பத்தாயிரத்து 651பேர். செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியவர்கள் எட்டாயிரத்து 810பேர். சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றியவர்கள் ஒன்பதாயிரத்து 664பேர். அனுமதிக்கப்பட்டதைவிட அதிக அளவு பாரம் ஏற்றியவர்கள் 430பேர்.