சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பல்கலைகழகத்தில், விடுதி அறையில் மாணவி தற்கொலை செய்து கொண்டதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கல்லூரி விடுதிக்கு தீ வைத்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை செம்மஞ்சேரியில் தனியார் பல்கலைகழகம் ஒன்று உள்ளது. இந்த பல்கலைகழகத்தில் நடைபெற்ற தேர்வில் முதலாம் ஆண்டு படித்து வந்த தெலுங்கான மாநிலத்தை சேர்ந்த ராகமோனிகா என்ற மாணவி காப்பியடித்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவியை ஆசிரியர்கள் கண்டித்ததால் மனம் வேதனையடைந்த அவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மாணவி தற்கொலைக்கு பல்கலைகழகம் தான் காரணம் எனக் கூறி மாணவர்கள், நேற்று இரவில் பல்கலைகழக அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின் போது அங்கு வன்முறை வெடித்தது. விடுதியில் உள்ள படுக்கை அறை பொருட்களை தீ வைத்து எரித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பல்கலைக்கழக வளாகம் முழுவதும் காவல்துறையினர் சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பல்கலைகழகத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.