கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே 5 காட்டுயானைகள் முகாமிட்டு இருப்பதால், பொதுமக்கள் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சூளகிரி அருகே கோபசந்திரம் என்ற இடத்தில் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு 5 காட்டு யானைகள் முகாமிட்டன. யானைகளைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த வனத்துறையினர், காட்டு யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்ட முயற்சி மேற்கொண்டனர். ஆனாலும் அவை அங்கேயே தங்கியுள்ளன.
இந்தநிலையில் நேற்று நள்ளிரவு பட்டாகுரபரபள்ளி கிராமத்தில் தஞ்சமடைந்த காட்டுயானைகள், அங்குள்ள விளைநிலங்களை நாசப்படுத்தி வருகின்றன. அவற்றை காட்டுப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பொதுமக்கள் ஆடு, மாடு முதலியவற்றை மேய்க்க வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.