நடிகர் சசிகுமாரின் உறவினரும், இணை தயாரிப்பாளருமான அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தம்மீது தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி பைனான்சியர் அன்புச்செழியன் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனிடையே, தம்மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி அன்புச்செழியன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில், அசோக்குமாருக்கும் தமக்கும் இடையே எத்தகைய பணப்பரிவர்த்தனையும் இல்லை என்றும், சசிகுமாருடன் மட்டுமே கொடுக்கல் வாங்கல் இருந்ததாகவும் அன்புச்செழியன் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து, முறையாக விசாரிக்காமல் காவல்துறையினர் தம்மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் அன்புச்செழியன் தம்முடைய மனுவில் கோரியுள்ளார். இதனை விசாரித்த நீதிபதி, அன்புச்செழியனின் மனுவில் கூறப்பட்டிருக்கும் புகார்கள் குறித்து மத்தியக் குற்றப்பிரிவு போலீசாரும், நடிகர் சசிகுமாரும் பதிலளிக்க உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை ஜனவரி 29ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை அன்புச்செழியன் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டார்.
2017-12-20