அடுத்த ஆண்டு சந்திரயான் – 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
திருச்சியில் மாநகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த விழாவில், கலந்து கொண்ட இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்த தூய்மை திருச்சி பாடலை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மயில்சாமி அண்ணாதுரை, நடப்பாண்டில் இந்தியா 12 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளதாகவும், 2018ம் ஆண்டு அரசின் சார்பில் 12 செயற்கைக்கோள்களையும், தனியார் பங்களிப்போடு 6 செயற்கைக்கோள்களையும் அனுப்ப திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறினார். 2018-ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் சந்திரயான் – 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளதாகவும் மயில்சாமி கூறினார். சந்திரயான்- 2 நிலவில் மூன்று கட்டப் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் என்று குறிப்பிட்ட அவர், நிலவின் துருவ வட்டப்பாதையில் மண்ணை எடுத்து, அங்கேயே வைத்து ஆராய்ச்சி செய்யும் வகையில் சந்திராயன் 2 விண்கலம் வடிவமைக்கப் பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.