நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் சாரல் திருவிழா தொடங்கியது. இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் பங்கேற்றனர். முதல் நாளான நேற்று பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக தெரிவித்தார்.
ரூ.24.65 கோடி வருவாய் கிடைத்திருப்பது சுற்றுலாத்துறையின் வரலாற்றில் சாதனை என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். சாரல் திருவிழாவில் இன்று தோட்டக்கலை கண்காட்சியும், நாய்கள் கண்காட்சியும் நடைபெறுகிறது. படகுப்போட்டி, ஓவியப் போட்டி, நீச்சல் போட்டி, கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு விதமான போட்டிகளுக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.